Published : 18 Mar 2015 10:34 AM
Last Updated : 18 Mar 2015 10:34 AM
உலக சமூகசேவை தினத்தை முன்னிட்டு சென்னை வந்திருந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள், திருமங்கலம் பகுதியில் சாலைகளை துடைப்பத்தால் சுத்தம் செய்தனர்.
உலக சமூக சேவை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருமங்க லத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியுடன் இணைந்து மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்ட நிகழ்ச்சிக்கு ‘கேன்-ஸ்டாப்’ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அமெரிக்காவின் அவிலா பல்கலைக்கழக சமூகசேவைத் துறை மாணவர்கள் 16 பேர் கலந்துகொண்டனர்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக துணை தூதர் ஜேம்ஸ் மேன்லோ நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசும்போது, ‘‘சமுதாயப் பணி நாட்டுக்கு செய்யும் சிறந்த தொண்டாகும். மாணவர்கள் எப்போதும் சமுதாயத்துக்கு தொண்டு செய்யவேண்டும். எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த சமூக சேவகர்களாக உருவாக வேண்டும்’’ என்றார்.
பின்னர், பள்ளி மாணவர்களும் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து சுற்றுப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றனர். பள்ளி மாணவர்கள் வாசக அட்டைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பிச் சென்றனர். அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதியில் உள்ள சாலைகளை துடைப்பத்தால் சுத்தம் செய்தபடி சென்றனர். இதை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT