Published : 06 Mar 2015 07:06 PM
Last Updated : 06 Mar 2015 07:06 PM
சேலத்தில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக 4 வது நாளாக 21 கிராமங்களில் ,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் திருமலைகிரி தோப்புக்காடு பகுதியில் சைலகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் செய்ய முற்படுகையில் இரு சமூகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழா நடத்த தங்களிடம் நன்கொடை வசூலிக்கவில்லை என்று ஒரு தரப்பினர் புகார் கூறினர். கோயிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே சாதி மோதல் பிரச்சினை உருவாகலாம் என்பதால், சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் திருமலைகிரி உள்பட மார்ச் 9ம் தேதி வரை 144 தடை உத்தரவை உதவி கலெக்டர் ஷேக் மொய்தீன் பிறப்பித்தார்.
இதையடுத்து, நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடமுழக்கு விழா நடைபெற இருந்த நிலையில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு உடன்பாடு ஏற்படாததால், மாவட்ட நிர்வாகம் கோயிலை பூட்டி சீல் வைத்தது.
இரு தரப்பினரும் கோயில் பிரச்சினையில் உடன்பாடுக்கு வராமல் இருக்கும் நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸார் ரோந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT