Published : 04 Mar 2015 10:02 AM
Last Updated : 04 Mar 2015 10:02 AM

விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 5.5 கிலோ தங்க கட்டிகள்: கடத்தியவரை பிடிக்க தீவிரம்

சென்னைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 5.5 கிலோ தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கிச் சென்றனர். இந்த விமானம் மீண்டும் மும்பைக்கு செல்ல இருந்தது. துப்புரவுப் பணியாளர்கள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓர் இருக்கைக்கு கீழே பை இருப்பதை பார்த்தனர்.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளுடன் வந்து வெடிகுண்டு சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதி செய்த பின்னர், பையை திறந்து பார்த்தபோது அதில் 9 தங்க கட்டிகள் இருந்தன. மொத்தம் 5 கிலோ 500 கிராம் எடையுள்ள அந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.1.65 கோடி என்று தெரியவந்துள்ளது.

தங்க கட்டிகளை கைப்பற்றிய அதிகாரிகள், இலங்கையில் இருந்து அவற்றை கடத்தி வந்த பயணி யார் என்பதை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x