Published : 30 Mar 2015 02:59 PM
Last Updated : 30 Mar 2015 02:59 PM

ரோஜா செடியில் ஊடுபயிராக இயற்கை வெங்காயம்: 35 கிலோ விதையில் 1,750 கிலோ உற்பத்தி செய்து திண்டுக்கல் விவசாயி சாதனை

திண்டுக்கல் அருகே விவசாயி ஒருவர், ரோஜா செடிகளுக்கு இடையே ஊடுபயிராக இயற்கை விவசாயத்தில் 35 கிலோ சின்ன வெங்காய விதைகளை சாகுபடி செய்து 1750 கிலோ உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார்.

ஊடுபயிர் விவசாயம் முன்னோர்களுக்குள் ஊறிப்போன ஒன்று. இரட்டிப்பு வருமானத்தின் தாரக மந்திரமான இம்முறை, சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. ஒவ்வொரு பயிர் சாகுபடியின்போதும், என்ன ஊடுபயிர் சாகுபடி செய்யலாம், என விவசாயிகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

திண்டுக்கல் அருகே தவசிமடையில் விவசாயி வி.ஏ. மருதமுத்து, அவரது மனைவி எம்.வாசுகி ஆகியோர், இயற்கை விவசாயத்தில் 75 சென்ட் நிலத்தில் ரோஜா சாகுபடி செய்துள்ளனர். எந்த முன்னேற்பாடும் இன்றி, ரோஜா செடிகளிடையே சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது 70 நாளில், ஊடுபயிர் சாகுபடியாக 35 கிலோ விதையில் 1,750 கிலோ சின்ன வெங்காயத்தை இயற்கை முறையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து மருதமுத்து, வாசுகி ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பொதுவாக ரோஜா என்றாலே ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் பகுதியில்தான் சாகுபடி செய்வர். நம் தோட்டத்திலும் சாகுபடி செய்வோம் என 70 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் ரோஜா சாகுபடி செய்தோம். ரோஜா செடிகளுக்கு 4 நாள், 5 நாளுக்கு ஒருமுறை எப்படியும் தண்ணீர் விட வேண்டும்.

இந்த தண்ணீரில், ஏதாவது ஒரு ஊடுபயிர் நடலாம் என நினைத்து, யாரும் செய்யாத முயற்சியாக, ரோஜா செடிகளுக்கு இடையே 35 கிலோ விதை வெங்காயம் சாகுபடி செய்தோம்.

ரோஜாவுக்கு விடும்போது, அதற்கும் தானாக தண்ணீர் பாய்ந்தது. மாதம் ஒருமுறை ரோஜாவுக்கு வேப்பம் புண்ணாக்கு தண்ணீர், கடலை புண்ணாக்கு தண்ணீர் மற்றும் சாணி, கோமியம், நாட்டு சர்க்கரை மற்றும் மாவு உள்ளிட்ட ஜீவாமிருதம், அமிர்த கரைசலை இயற்கை உரமாக இட்டோம். அதையே வெங்காயத்துக்கும் உரமாக இட்டோம். ஊடு பயிருக்கு தனியாக பராமரிப்பு இல்லை. கடைசிவரை எந்த நோயும் ஏற்படவில்லை. 70 நாளில் வழக்கத்தைபோல வெங்காயம் அறுவடை பருவத்துக்கு வந்துவிட்டது.

சாதாரண சின்ன வெங்காயத்தைவிட, ரோஜாவுக்கு இடையே ஊடுபயிராக வளர்ந்த இயற்கை வெங்காயம் ஏற்றுமதி ரகம்போல நல்ல நிறமாக பருமன் அதிகமாக கிடைத்துள்ளது. 35 கிலோ விதை வெங்காயத்தில் 1750 கிலோ மகசூல் கிடைத்துள்ளது.

இப்போது ரோஜாவிலும் மொட்டுகள் மலர ஆரம்பித்து விட்டன. வெங்காயத்தால் ரோஜாவுக்கும், ரோஜாவால் வெங்காயத் துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வெங்காயத்துக்கென்று மாதம் இரண்டுமுறை இயற்கை உரமிட்ட வகையில் ரூ. 140 செலவானது.

குறைந்த முதலீட்டில் பராமரிப்பு இல்லாத இரட்டிப்பு வருவாய் கிடைத்துள்ளது. வெங்காயத்தை நட்டதும் தெரியவில்லை, அறுவடை செய்ததும் தெரியவில்லை. மிகவும் எளிதான விவசா யமாக உள்ளது என்றனர்.

இயற்கை முறையில் ரோஜா செடிகளுக்கு இடையே ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம்.

35 கிலோ விதை வெங்காயத்தில் 1750 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. இப்போது ரோஜாவிலும் மொட்டுகள் மலர ஆரம்பித்து விட்டன. வெங்காயத்தால் ரோஜாவுக்கும், ரோஜாவால் வெங்காயத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x