Published : 13 Mar 2015 09:58 AM
Last Updated : 13 Mar 2015 09:58 AM

தரமான ரேஷன் பொருட்களை வழங்க ஜி.கே.வாசன் கோரிக்கை

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, அன்னயோஜனா போன்ற பல்வேறு பிரிவுகளில் சுமார் ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் 34 ஆயிரம் நியாயவிலைக் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாக இல்லை. விலையில்லா அரிசி தரமின்றி இருப்பதால் அதை பொதுமக்கள் வாங்க மறுக்கிறார்கள்.

மக்களின் தேவைக்கு ஏற்ப பொருட்கள் கிடைப்பதில்லை. தரமான உணவுப் பொருட்கள் சரியான எடையுடன் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் 75 சதவீதம் நியாயவிலைக் கடைகள் பெரும்பாலும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு பண்டகச் சாலை போன்றவற்றின் கீழ்தான் இயங்குகின்றன. இவை பகுதி நேர கடைகளாக செயல்படுவதால் பொது மக்கள் உரிய நேரத்தில் பொருட்களை பெற முடியவில்லை.

நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும் நாட்களில் அரசு ஒதுக்கீடு செய்திருக்கும் உணவுப் பொருட்கள் எல்லாம் ஒரே நேரத்தில் கிடைப்பதற்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதற்கு அரசு வழி வகை செய்ய வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் அலைச்சல் மற்றும் நேரம் விரயமின்றி உரிய உணவுப் பொருட்களை வாங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x