Published : 20 Feb 2015 10:23 AM
Last Updated : 20 Feb 2015 10:23 AM

மார்க்சிஸ்ட் 21-வது மாநில மாநாட்டில் தமிழ் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட் டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு சென்னையில் 4 நாட்களாக நடைபெற்று வந்தது. மாநாட்டின் இறுதி நாளான நேற்று மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திருக் கோவிலூரைச் சேர்ந்தவர் ஜி.ராம கிருஷ்ணன். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று கடலூரில் வழக்கறிஞராக பணியாற்றினார். மாணவ பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சிஐடியு-வின் மாநில துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். 1969-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து, 1981-ம் ஆண்டு முதல் முழு நேர ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

1989-ல் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணன், 2008-ல் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2010-ம் ஆண்டில் மாநிலச் செயலாளராக இருந்த என்.வரத ராஜன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த பொறுப்பி லிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்த பின்னர், அந்த பொறுப் புக்கு அதே ஆண்டில் ராம கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். பின்பு, 2012-ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 20-வது மாநில மாநாட்டில் மீண்டும் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தற் போது மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார்.

பேட்டி

மாநாடு முடிந்த பிறகு பத்திரிகை யாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:

11 பெண்கள் உட்பட 81 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜி.ராம கிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராஜன், பி.செல்வசிங், கே.பாலகிருஷ்ணன், கே.தங்கவேல், பி.சம்பத், எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், நூர் முகமது, ஏ.லாசர், பி.சண்முகம், என்.குணசேகரன், கே.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம் ஆகிய 15 பேர் கொண்ட மாநிலச் செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினை களுக்கான மாற்றுக் கொள்கை முன்வைக்கப்பட்டு விவாதிக் கப்பட்டது, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்தியில் பாஜக பின்பற்றும் தாராளமய கொள்கைகளைத்தான் மாநிலத்தில் அதிமுகவும் பின்பற்றுகிறது. இதனால், தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்தும் வகுப்புவாத வன்முறைகளை எதிர்த்தும் ஏப்ரல் மாதத்தில் லட்சக்கணக்கான மக்களை நேரில் சந்திக்கும் ‘மக்கள் சந்திப்பு இயக்கங்கள்’ நடத்தப்படும்.

அரசு நிர்வாகம், வேலை நியமனம் என அனைத்து மட்டங்களிலும் பல வடிவங்களில் தலை விரித்தாடும் ஊழலை எதிர்த்து ‘லோக் ஆயுக்தா’ அமைக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும். நீதிபதிகள் நியமனம் குறித்து நீதித்துறை ஆணையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும், தீண்டாமை கொடுமைகள், கௌரவ கொலைகளுக்கு எதிராக போராட வேண்டும், வகுப்புவாதத்தை வீழ்த்த மதச்சார்பற்ற மக்கள் மேடை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன.

ஏப்ரல் மாதம் விசாகப் பட்டினத்தில் நடக்கவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x