Published : 22 Feb 2015 12:01 PM
Last Updated : 22 Feb 2015 12:01 PM

திரிசூலத்தில் குவாரிக்காக வெட்டிய 300 அடி பள்ளத்தில் லாரி விழுந்து கிளீனர் பலி

திரிசூலத்தில் கல் குவாரிக்காக தோண்டப்பட்ட 300 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் லாரியுடன் விழுந்த கிளீனர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை மீனம்பாக்கம் அடுத்த திரிசூலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நிறைய கல் குவாரிகள் உள்ளன. மூவரசம்பட்டு சாலை அருகே ‘நம்பர் ஒன்’ என்ற பெயரிலான குவாரி உள்ளது. அங்கு மிகப்பெரிய பாறையை உடைத்து எடுத்தபோது சுமார் 300 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் உருவானது. இந்த ராட்சத பள்ளத்தில் ஊற்று மற்றும் மழைநீர் மூலமாக 40 அடி ஆழத்துக்கு எப்போதும் தண்ணீர் கிடக்கும். இதனால் அப்பகுதியில் தற்போது கல் வெட்டுவது இல்லை.

இந்த குவாரிக்கு மேலே மற்றொரு குவாரி உள்ளது. அங்கிருந்து கற்களை ஏற்றிச் செல்ல நேற்று காலை 10.30 மணி அளவில் ராமு என்பவர் தன் லாரியை ஓட்டிக்கொண்டு குவாரிக்கு வந்தார். லோடு ஏற்றுவதற்குள் சாப்பிட்டு வருவதாகக் கூறிவிட்டு, கிளீனர் கலைவாணன் (25) பொறுப்பில் லாரியை விட்டுச்சென்றார்.லோடு ஏற்றுவதற்கு வசதியாக லாரியை நகர்த்தி நிறுத்துமாறு கிளீனர் கலைவாணனிடம் குவாரி தொழிலாளர்கள் கூறினர்.

இதற்காக லாரியை அவர் ஸ்டார்ட் செய்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக பின்னோக்கி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற விழுந்து பள்ளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மூழ்கியது.

அதிர்ச்சி அடைந்த குவாரி தொழிலாளர்கள் உடனே பல்லாவரம் காவல் நிலையத்துக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளுடன் குவாரி பள்ளத்துக்குள் இறங்கித் தேடினர். 4 மணி நேரம் தேடியும் கலைவாணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. லாரிக்குள்ளேயே அவர் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் கூறினர்.

பெரிய கிரேன்கள் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் லாரியையும், அதில் சிக்கியிருக்கும் கலைவாணனையும் மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். பல மணி நேரம் ஆகியும் கலைவாணன் வெளியே வராததால், அவர் இறந்திருக்கக்கூடும் என்று பல்லாவரம் போலீஸார் கூறினர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி விழுந்த அதே இடத்தில்தான் கடந்த டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் மடிப்பாக்கம் மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அடுத்த சம்பவம் நடப்பதற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x