Published : 13 Feb 2015 11:45 AM
Last Updated : 13 Feb 2015 11:45 AM

மாடியில் இருந்து தள்ளி விட்டு இளைஞர் கொலை: 3 பேர் கைது

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேற்கு மாடவீதியில் உள்ள ஒரு பருப்பு கிடங்கில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ராம் சவுத்ரி (27), ராகுல் சவுத்ரி, சந்தன் மிஸ்ரா, ஹன்சிராம் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். கிடங்கு அருகே இருக்கும் ஒரு அறையில் அவர்கள் நால்வரும் தங்கியுள்ளனர். வேலைக்கு சென்றுவிட்டு இரவில் மது குடிப்பது இவர்களின் வழக்கம்.

இந்நிலையில் சந்தன் மிஸ்ரா, ராகுல் சவுத்ரி, ஹன்சிராம் ஆகியோரின் பணம் ரூ.7500 திருடுபோனது. அதை ராம் சவுத்ரி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராம் சவுத்ரிக்கும் மற்ற மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் மாடிப் படிக்கட்டு அருகே தலையில் ரத்தம் வந்த நிலையில் ராம் சவுத்ரி இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ராம் சவுத்ரியை அவரது நண்பர்கள் மூவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதுபற்றி போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

நேற்று முன்தினம் இரவில் ராம் சவுத்ரியை விட்டுவிட்டு ராகுல் சவுத்ரி, சந்தன் மிஸ்ரா, ஹன்சிராம் ஆகிய 3 பேரும் சென்று மது குடித்துவிட்டு வந்துள்ளனர். அறைக்கு வந்த 3 பேரும் பணம் திருடு போனது குறித்து ராமிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் 3 பேரும் சேர்ந்து ராம் சவுத்ரியை மாடியில் இருந்து தள்ளி விட்டுள்ளனர். இதனால் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ராகுல் சவுத்ரி, சந்தன் மிஸ்ரா, ஹன்சிராம் ஆகியோரை திருவொற்றியூர் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x