Published : 19 Feb 2015 09:10 AM
Last Updated : 19 Feb 2015 09:10 AM
தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘அம்மா குழந்தைகள் வார்டு - 500’ நேற்று திறக்கப்பட்டது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் செலவில் இந்த வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20 படுக்கைகள் வசதி கொண்ட இந்த அறை முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது.
பிறந்து 1 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவ மனையில் இருப்பதுபோன்ற உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கியுள்ளனர்.
அந்த அறை முழுவதும் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான கார்ட்டூன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விளையாட்டுப் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு படுக்கைக்கு அருகிலும் சிறுவர்களின் பெற்றோர் அமர சாய்வு நாற்காலி போடப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு, ஒவ்வொரு படுக்கைக்கு அருகிலும் உள்ள பட்டனை அழுத்தி செவிலியர்களின் உதவியைக் கோரலாம்.
வார்டில் உள்ளவர்களுக்கு சுகாதாரமான கழிவறை, சுத்தமான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளுக்கு நிகராக மேம்படுத்திய வசதிகொண்ட இந்த வார்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால் நேற்று திறந்துவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT