Published : 15 Feb 2015 10:25 AM
Last Updated : 15 Feb 2015 10:25 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினரின் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை நாளை (பிப்.16) நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கென 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 1,08,026 ஆண்கள், 1,13,138 பெண்கள், 8 இதரர் என மொத்தம் 2,21,172 வாக்காளர்கள் வாக்களித்தனர். 81.83 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றவுடன், வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறை நேற்று அதிகாலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

23 சுற்றுகள்

வாக்குகள் எண்ணிக்கை நாளை(பிப்.16) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இரு வரிசைகளாக மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள ஊழியர்களுக்கு இன்று(பிப்.15) பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x