Published : 28 Feb 2015 05:36 PM
Last Updated : 28 Feb 2015 05:36 PM

கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. அதேநேரத்தில் நிறுவன வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்திருப்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு என்பது வெளிப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். நமது நாட்டு மக்கள் தொகையில் மிகமிக குறைவானவர்களே வருமான வரி செலுத்தி வருகிறார்கள். இதற்கு காரணம் போதிய கல்வி அறிவு இல்லாத நிலையில் வருமான வரி கட்ட வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் கடுமையான நடவடிக்கை பயன் தருமா என்பது மிகப்பரிய கேள்விக்குறியாகும்.

நிதியமைச்சர் எல்லாவற்றிற்கும் அரசு - தனியார் துறை இணைந்த முயற்சிகளையும், அந்நிய முதலீட்டையும் தான் தொழில் வளர்ச்சிக்கு நம்பியிருக்கிறாரே தவிர, நமது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்பதையே காட்டுகிறது. சேவை வரியை 12.34 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்திருப்பது சாதாரண, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கிற நடவடிக்கையாகும்.

கடந்த ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்காக பல அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் மருத்துவ நிலையம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் அதே அறிவிப்பை மறுபடியும் செய்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

அதேபோல சென்னை கே.கே. நகரில் ரூ.180 கோடியில் 200 படுக்கைகளுடன் முதியோர், மருத்துவ நிறுவனம் தொடங்கப்படும் என்று கடந்த முறை அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. அதுமட்டுமல்ல, சென்னை - பெங்களூர் தொழில் மேம்பாட்டு சாலை வழித்தடத்தில் உள்ள பொன்னேரியில் ஸ்மார்ட் நகரம் அமைப்பதற்கு மாஸ்ட்டர் பிளான் விரைவில் தயாரிக்கப்படும் என்று கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தார். ஏழு மாத காலத்திற்கு முந்தைய அறிவிப்புகள் என்ன ஆனது ? காற்றோடு காற்றாக பறந்து விட்டதா ? இதுதான் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா’திட்டமா?

பொதுவாக ஏழைஎளிய மக்கள் பயன் பெற கடந்த மத்திய காங்கிரஸ் அரசு ரூ.3 லட்சத்து 77 ஆயிரம் கோடியை ஆண்டுதோறும் மானியமாக வழங்கியது. அந்த மானியங்கள் சேர வேண்டியவர்களுக்கு போய்ச் சேரவில்லை என்கிற காரணத்தை காட்டி மானியங்களுக்கே மூடு விழா நடத்த நரேந்திர மோடி அரசு முயற்சி செய்வது நிதிநிலை அறிக்கையில் வெளிப்படையாக தெரிகிறது.

மானியங்கள் தவறானவர்களுக்கு போகக் கூடாது; அதை தடுத்து நிறுத்த வேண்டுமென்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஏழைஎளிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x