Published : 22 Feb 2015 12:46 PM
Last Updated : 22 Feb 2015 12:46 PM
அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 24-ம் தேதி, அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
செய்தி மக்கள் தொடர்பு அலுவ லர்களின் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடந்தது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ.ராஜாராம் தலைமை தாங்கினார்.
அனைத்து மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் (பி.ஆர்.ஓ.) வீடியோ கான்பரன்சிங் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு நடத்தினார். அவர் பேசும்போது, ‘‘ஏழை மக்களின் நலன் கருதி ஜெயலலிதா உருவாக்கி செயல்படுத்தியுள்ள திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியை பிப்ரவரி 24-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த முறையில் நடத்த வேண்டும். மாவட்டங்களில் உள்ள நினைவகங்கள் மற்றும் நினைவு மண்டபங்களை எவ்வித குறைபாடும் இல்லாமல் பராமரிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர்கள் தங்க.புகழேந்தி (மக்கள் தொடர்பு), எஸ்.பி.எழிலகன் (செய்தி), இணை இயக்குநர்கள் கு.தானப்பா (பொருட்காட்சி), டி.ஆர்.ஜெய (கள விளம்பரம்), உல.ரவீந்திரன் (நினைவகங்கள்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT