Published : 22 Feb 2015 09:51 AM
Last Updated : 22 Feb 2015 09:51 AM
சட்டப்பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேருக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்துஒரு கருத்து தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பதிலுக்கு தேமுதிக உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதன் காரணமாக பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதனால், மோகன்ராஜை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். இதைக் கண்டித்து தேமுதிக உறுப்பினர்கள், பேரவைத் தலைவரின் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர். அவர்களை காவலர்கள் தடுத்தபோது இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன் இப்பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில், பேரவை உரிமைக் குழுவின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. பேரவையில் அமளி நடந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட தேமுதிக உறுப்பினர்கள் மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர்கள் 6 பேருக்கும் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பேரவையில் நடந்த சம்பவம் தொடர்பாக 6 பேரும் உரிமைக் குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT