Published : 18 Feb 2015 10:21 AM
Last Updated : 18 Feb 2015 10:21 AM

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சன் டிவி ஊழியர்கள் 2-வது தடவையாக தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவர்கள் 3 பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் 2-வது தடவையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. சிபிஐ மற்றும் மனுதாரர்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, தீர்ப்பை செவ்வாய்க்கிழமை (நேற்று) அறிவிப்பதாகக் கூறி வழக்கை தள்ளிவைத்தார்.

நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை இன்னும் தீவிரமாக விசாரிக்கவேண்டிய அவசியம் விசாரணை முகமைக்கு (சிபிஐ) உள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை ஜாமீனில் விடுவித்தால், அது வழக்கு விசாரணையை பாதிப்பதோடு அவர்கள் தங்கள் நிறுவன உரிமையாளர்களின் உதவியுடன் வழக்கின் சாட்சியங்களையும் கலைக்கக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு, மனுதாரர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x