Published : 13 Feb 2015 10:40 AM
Last Updated : 13 Feb 2015 10:40 AM

இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இன அழிப்பே: வடக்கு மாகாண கவுன்சில் தீர்மானத்தால் பெரும் பரபரப்பு; தமிழகத் தலைவர்கள் வரவேற்பு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலை நடத்தப்பட்டது என்றும், இதுகுறித்து சர்வதேச விசாரணைக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சிலில் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இன அழிப்பே எனக் கூறும் இந்தத் தீர்மானம், இலங்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை உலகுக்கு தெரிவிக்கும் தீர்மானம்’ என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்தத் தீர்மானம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடக்கு மாகாண கவுன்சிலை உடனடியாக இலங்கை அதிபர் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுப்பெற்று வருகிறது.

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அந்தத் தீர்மானம் குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம்:

மு.க.ஸ்டாலின் (திமுக பொருளாளர்):

இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் தீர்மானத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை உடனடியாக நடைபெற வேண்டும்.

டாக்டர் ராமதாஸ் (பாமக நிறுவனர்):

வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தால் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. அந்தத் தீர்மானத்துக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தனி ஈழம் தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி தலைவர்):

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் முன் மொழிந்த தீர்மானத்தை முதல் வர் விக்னேஸ்வரன் நிறைவேற்றி யுள்ளார். தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றும், தமிழர்களை மீண்டும் குடியேற்று வதற்கு இலங்கை அரசு பல உதவிகளைச் செய்து வருகிறது என்றும் முன்பு ராஜபக்ச அரசும், இப்போது சிறிசேனா அரசும் செய்த பிரச்சாரங்கள் பொய்யானவை என்பது அம்பலமாகிவிட்டது. இந்தத் தீர்மானத்தை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் விருப்பமாகக் கருதி, இலங்கையில் விசாரணை மேற்கொள்ள ஐநா முன்வர வேண்டும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்):

இலங்கை வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கிறோம். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேதான் போர் நடைபெற்றது. எனவே, இனவாத அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு, சமூக நல்லிணக்கத்துக்கும் ஐனநாயக உணர்வுகளுக்கும் முன்னுரிமை கொடுத்து, அங்கு அமைதியை உருவாக்க உரிய தருணம் வந்துவிட்டது.

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக மாநிலத் தலைவர்):

இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலைதான் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது சரியான முடிவாகும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. இலங்கை தமிழர்களின் நிலை உயர தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசிடம் தமிழக பாஜக வலியுறுத்தும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலர்):

இலங்கையில் புதிய அதிபராக மைத்ரி சிறிபால சேனா பொறுப்பேற்ற பின்னரும், தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடர்கின்றன. தமிழர்களின் துயரத்தைப் போக்க புதிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதையே வடக்கு மாகாண சபை தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது. இந்தச் சூழலில், வடக்கு மாகாண சபையின் தீர்மானம் புதிய வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் தருகிறது.

தொல். திருமாவளவன் (விசிக தலைவர்:

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் வருகிற மார்ச் மாதம் இலங்கை போர் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்போது, இலங்கை அரசின் தமிழர் விரோத போக்குக்கு இந்திய அரசு துணை போகக் கூடாது. வடக்கு மாகாண சபை தீர்மானத்தை இந்திய அரசு வழிமொழிந்து ஆதரிக்க வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்):

வடக்கு மாகாண சபையின் கோரிக்கை புதிதல்ல. இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே ஐநா மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. சர்வதேச விசாரணைக்கு புதிதாக அமைந்துள்ள இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். இந்திய அரசும் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர்):

2009-க்குப் பிறகு இலங்கை தமிழர்கள் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்தத் தீர்மானம் உணர்த்துகிறது. இந்த விவ காரத்தில் ராஜபக்சவைப்போல, சிறிசேனா நடந்து கொள்ளக் கூடாது. இந்தியாவுக்கும் இதில் தார்மீக பொறுப்பு இருக்கிறது.

பீட்டர் அல்போன்ஸ் (தமாகா):

இலங்கை வடக்கு மாகான சபை தீர்மானத்தை வரவேற்கிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு இணக்கமான சூழல் நிலவ வேண்டும். இலங்கையில் மீண்டும் துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஐநா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கவிஞர் காசி ஆனந்தன்:

போர்க் குற்றம், மனித உரிமை மீறல் என்ற வகையில் மட்டுமே சொல்லப்பட்ட ஈழத் தமிழர் படுகொலையை, இன அழிப்பு நடவடிக்கை என்று கூறி சர்வதேச விசாரணை வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண சபை கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய- இலங்கை நட்புறவு மையம் முழுமையாக வரவேற்கிறது. இந்தத் தீர்மானத்தை இலங்கையிலுள்ள மத்திய சிறிசேனா அரசு ஏற்க மறுத்துள்ளது. இந்தப் போக்கு முன்பிருந்த ராஜபக்ச அரசின் போக்கை ஒத்ததே. இலங்கையில் ஆட்சி மாறியதால் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் வரும் என்பது பொய்யான நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x