Published : 15 Feb 2015 10:39 AM
Last Updated : 15 Feb 2015 10:39 AM

சென்னையில் கருத்தரங்கம்: தரமான கல்விக்கு தன்னாட்சி அவசியம் - விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

தன்னாட்சி அந்தஸ்து கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட வேண்டும். தரமான கல்விக்கு தன்னாட்சி அவசியம் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தினார்.

சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ சிறப்புப் பள்ளியில் ‘மாற்றத்துக்கான கல்வியாளர்கள்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று, பள்ளிக் கல்வியில் தன்னாட்சி, படைப்பாற்றல், சமத்துவம் ஆகியவை குறித்து குழு விவாதம் நடந்தது. விவாதத்துக்கு ஊடக மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ராம் பேசியதாவது:

குறைந்த செலவில் தரமான கல்வி என்பது காகித அளவில் மட்டும் இல்லாமல், அதை செயல்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அறிவார்ந்த சமுதாயத்தால் மட்டுமே பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். விண்வெளி ஆராய்ச்சி போன்றவற்றில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்துள்ள போதிலும், அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதில் இன்னமும் பின்தங்கியுள்ளது.

காமராஜர் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டமும், இதை மேம்படுத்தி எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டமும் பள்ளிகளில் மாணவர் வருகையை கணிசமாக அதிகரித்தன. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தால் தற்போது 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களின் பள்ளி வருகை 100 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால், குழந்தை தொழிலாளர் முறையும் ஒழிந்தது.

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. எனவே, வகுப்பறையில் மாணவர்களுக்கு மதசார்பின்மையின் அவசியம் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். ஆசிரியர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக, எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் இப்பணியைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே போகிறது. கட்டணம் அதிகமாக இருந்தும், நள்ளிரவு முதல் காத்துக்கிடந்து விண்ணப்பங்கள் வாங்கி தனியார் பள்ளியில்தான் குழந்தைகளை சேர்க்கின்றனர். முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார். தற்போது அது குறைந்து வருகிறது.

தமிழகத்தில் 99 சதவீத அரசு ஊழியர்கள், தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அப்படித்தான். அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்காது என்று அவர்கள் நினைப்பதே இதற்கு காரணம். ஏறக்குறைய நாடு முழுவதும் இதேநிலைதான் உள்ளது.

சில அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கு அங்குள்ள தலைமை ஆசிரியரும், குழுவாக செயல்படும் ஆசிரியர்களுமே காரணம்.

அதிக கட்டணம் ஏன்?

தனியார் கல்வி நிறுவனங்கள் இணைப்பு அங்கீகாரம், ஆட்சேபம் இல்லா சான்று, அனுமதி உட்பட 5 விதமான சான்றுகளை அரசிடம் இருந்து பெற வேண்டியுள்ளது. இதற்கு நிறைய பணம் செலவிட நேரிடுகிறது. அதனால்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே, தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக அரசு தலையீடு கூடாது. இதற்கு தன்னாட்சி அந்தஸ்து கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டும் கல்வியை மேம்படுத்த முடியும். தரமான கல்விக்கு தன்னாட்சி அவசியம்.

இவ்வாறு ஜி.விசுவநாதன் பேசினார்.

கருத்தரங்கில் சென்னை ஐஐடி கலை பாடப்பிரிவு துறை உதவிப் பேராசிரியர் கல்பனா கருணாகரன் உட்பட பலர் பேசினர். முன்னதாக டான் பாஸ்கோ பள்ளிகளின் தாளாளர் ஜான் அலெக்ஸாண்டர் வரவேற்றார். நிறைவில், டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் இருதயராஜ் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x