Published : 18 Feb 2015 10:38 AM
Last Updated : 18 Feb 2015 10:38 AM
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி, எம்.எல்.ஏ.வாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதிமுக வேட்பாளர் வளர்மதி அமோக வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.வாக அவர் பதவியேற்ற நிகழ்ச்சி சென்னை கோட்டையில் உள்ள சட்டப் பேரவை தலைவர் அறையில் நேற்று காலை நடைபெற்றது. சரியாக காலை 9 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பேரவை தலைவர் ப.தனபால், வளர் மதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டப் பேரவை உறுப்பினராக பதவியேற்ற வளர்மதிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து நத்தம் ஆர்.விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள் வளர் மதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பேரவை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன், அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிய எம்எல்ஏ வளர்மதி முதன் முறையாக நேற்றைய சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சரியாக காலை 11.10 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்த அவர், முதல்வரின் இருக்கைக்கு எதிரே வலது பகுதியில் 4-வது வரிசையில் கடைசியாக அமர்ந்தார். அந்த இடத்துக்கு மேலே எம்ஜிஆர் புகைப்படம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT