Published : 12 Feb 2015 12:04 PM
Last Updated : 12 Feb 2015 12:04 PM
விவசாய நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி வரும் 24-ம் தேதியன்று மேதா பட்கர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழக விவசாயிகளுக்கு மதிமுக தலைவர் வைகோ அழைப்புவிடுத்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2013-ல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டது. விவசாயி களிடம் இருந்து விளைநிலங்களை கையகப்படுத்தும் இச்சட்டத்துக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை யடுத்து, இச்சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந் தது. இதன்படி, நிலம் கையகப் படுத்துவதாக இருந்தால் 80 சதவீத நில உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்தால்தான் கையகப்படுத்த முடியும். தற்போது பாஜக அரசு பிறப்பித்துள்ள நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் 2014-ன்படி ஏற்கெனவே இருந்த சட்டத்தில் கூறப்பட்ட விவசாயிகளை பாதுகாக்கும் அம்சங்கள் அடியோடு நீக்கப்பட்டு விட்டன. இந்த அவசர சட்டத்தின் மூலம் நில உரிமையாளர்களின் 80 சதவீத ஒப்புதலை பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது.
மேலும், இச்சட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளும், கல்வி நிறுவனங்களும் தங்களுக் குத் தேவையான நிலங்களை கையகப்படுத்திக் கொள்ளலாம். ரவுலட் சட்டத்தைவிட இச்சட்டம் கொடுமையாக உள்ளது. இச்சட்டத்தை எதிர்த்து சமூக சேவகர் மேதா பட்கர் தலைமையில் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில் வரும் 24-ம் தேதி நாடாளுமன்ற முற்றுகை அறப்போராட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT