Published : 01 Dec 2014 10:10 AM
Last Updated : 01 Dec 2014 10:10 AM

ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கட்டிட தொழிலாளி கைது

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், “கஸ்தூரிபாய் நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும்” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து அடையாறு காவல் துணை ஆணையர் கண்ணன், ஆய்வாளர் சகாதேவன் மற்றும் போலீஸார் கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு இளைஞர் மட்டும் நின்று கொண்டிருந்தார். அவரைப்பிடித்து விசாரிக்கவே அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். போலீஸார் அவரை சோதனை செய்து பார்த்தபோது அவரிடம் 3 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது.

அந்த போன்களை வாங்கி சோதனை செய்தபோது, ஒரு செல்போனில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு பேசியிருந்தது தெரிந்தது. உடனே போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வண்டலூரை சேர்ந்த விக்னேஷ் என்பதும், ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் ரயில் வராததால் விளையாட்டுக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது.

திருவான்மியூரில் ஒரு கட்டிட நிறுவனத்தில் தொழிலாளியாக விக்னேஷ் வேலை பார்க்கிறார். அங்கு உடன் பணிபுரியும் கட்டிட தொழிலாளர்களிடம் இருந்து அந்த செல்போன்களை அவர் திருடியது தெரியவந்தது. அடையாறு போலீஸார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x