Published : 26 Dec 2014 08:31 PM
Last Updated : 26 Dec 2014 08:31 PM

தேச நலனுக்கு எதிராக அந்நிய நேரடி முதலீட்டுக்கு அவசர சட்டம்: மார்க்சிஸ்ட் காட்டம்

தேசிய நலனுக்கு எதிராக காப்பீட்டுத் துறை, நிலக்கரிச்சுரங்கம் ஒதுக்கீடு, மருத்துவ உபகரண உற்பத்தி ஆகிய துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதித்திட அவசர சட்டம் கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "காப்பீட்டுத் துறையில் 49 சதமானம் அந்நிய நேரடி முதலீடு, நிலக்கரிச் சுரங்கங்களை மீண்டும் தனியாருக்கு ஏலமிடுவது, மருத்துவ உபகரணத் துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு ஆகிய பிரச்சனைகளில் அவசர சட்டங்களை பிறப்பிக்க மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற முடியாத நிலையில் நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த அடுத்த நாளே அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய பாஜக அரசு முடிவெடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே முழுமையாக மீறுவதாகும். மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டதில் துவங்கி, தொடர்ச்சியாக நாடாளுமன்றம் ஓரம் கட்டப்படும் அபாயகரமான நடைமுறையை மோடி அரசு பின்பற்றுகிறது.

1956ம் ஆண்டு மத்திய அரசால் 5 கோடி ரூபாய் மூலதனமிட்டு துவங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனமும், 1972 இல் நாட்டுடமையாக்கப்பட்ட பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்று பல லட்சம் கோடியை ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு நிதியாதாரத்தை அளித்து வருகிறது.

சாமானிய, நடுத்தர மக்களுக்கான காப்பீட்டுப் பயனை விரிவுபடுத்தி வருகிறது. இந்த பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்துவதற்குப் பதிலாக தனியார்துறை நிறுவனங்களின் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதமாக அதிகரிப்பது மக்களுக்கும்/ தேச நலனுக்கும் பெரும் கேட்டை விளைவிக்கும். இதில் அவசரம் காட்டுவது அமெரிக்க அதிபரின் குடியரசு தின வருகையை ஊக்கப்படுத்துவதற்கா?.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பெருத்த முறைகேடு நடந்த காரணத்தினால் உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒதுக்கீட்டை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மக்களவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றிய பாஜக அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றிட முடியாததால் அவசரச் சட்டப்பாதை வழியாக அதை அமலாக்கத் துடிக்கிறது.

ஏற்கெனவே 108 உயிர் காக்கும் மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கிவிட்டது. விலைக் கட்டுப்பாட்டு குழுவையும் கலைத்துவிட்டது. தற்போது மருத்துவ உபகரணத்துறையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்க அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மோடி - ஒபாமா கூட்டறிக்கையே இதற்குப் பின்புலமாக அமைந்துள்ளது.

ஜனநாயக விரோதமாக, தேசிய நலனுக்கு எதிராக காப்பீட்டுத்துறை, நிலக்கரிச்சுரங்கம் ஒதுக்கீடு, மருத்துவ உபகரண உற்பத்தி ஆகிய துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதித்திட அவசர சட்டம் கொண்டு வர மத்திய பாஜக அரசு எடுத்து வரும் முயற்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விலைவாசியைக் குறைக்கவோ, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, உயர்மட்ட ஊழலைத் தடுக்கவோ, கறுப்புப் பணத்தை மீட்கவோ துடிக்காத அரசு, உள்நாட்டு வெளிநாட்டுப் பெரு முதலாளிகளுக்காக நாடாளுமன்றம் தடுத்தாலும் விடேன் என்று செயல்படுவது, அரசின் இதயம் துடிப்பது யாருக்காக என்பதைத் தெளிவுபடுத்தி வருகிறது.

மக்கள் நலனுக்கு விரோதமாக அவசரச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்துப் பகுதி மக்களும் குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x