Published : 13 Dec 2014 09:23 AM
Last Updated : 13 Dec 2014 09:23 AM

மேயர் மகனுக்கு எதிரான புகாரில் உண்மை இல்லை: வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை மேயரின் மகன் வெற்றி துரைசாமிக்கு எதிரான குற்றச்சாட்டில் உண்மை இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனது மனைவி மற்றும் மகளை வெற்றி துரைசாமி சட்டவிரோதமாக வைத்திருப்பதாகவும், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி வெளிவேல ராகேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வெற்றி துரைசாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு பற்றி தகவல் தெரிந்ததும் மனுதாரரின் மனைவி சவுமியா தனது குழந்தை மற்றும் பெரியப்பாவுடன் உயர் நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் வந்து தனது நிலையை விளக்க விரும்பினார். ஆனால், அதற்குள் நீதிமன்றம் முடிந்துவிட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.மதிவாணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் நேற்று இந்த வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

‘‘இன்று மனுதாரரின் மனைவி சவுமியாவும், அவரது குழந்தையும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். சவுமியாவின் தந்தையும் ஆஜராகி, இவர் எனது மகள்தான் என்று அடையாளம் காட்டினார்.

விசாரணையில், சவுமியாவும், அவரது மகளும் வெற்றி துரைசாமியிடம் சட்டவிரோதமாக இருக்கவில்லை என்றும், அவர் மனுதாரரின் நண்பர் மட்டுமே என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தாம், வெற்றி துரைசாமியிடம் சட்டவிரோதமாக இருக்கவில்லை என்று சவுமியாவே கூறியதால், மனுதாரரின் குற்றச்சாட்டு கேள்விக்குறியாக உள்ளது.

ராஜமுந்திரி நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிராக தாம் தொடர்ந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் சவுமியா கூறியுள்ளார். அவர் யாருடனும் சட்டவிரோதமாக இருக்கவில்லை என்று தெரியவருவதால் இந்த ஆட்கொணர்வு மனு நிராகரிக்கக்கூடியதாகும். எனவே, மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்’’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x