Published : 06 Dec 2014 11:27 AM
Last Updated : 06 Dec 2014 11:27 AM
சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான அங்கீ காரம் தொடர்பான கல்வித் துறை சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2011-ல் பள்ளிக் கல்வித் துறை திருத்தம் கொண்டு வந்து 18.9.2014 அன்று அரசாணை வெளியிட்டது. சிபிஎஸ்சி பள்ளிகள், தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் அங்கீகாரம் பெறுவதற்கு இச்சட்டதிருத்தம் வழிவகை செய்கிறது. அதன்படி அங்கீகாரம் பெறாததால், திருச்சியில் உள்ள கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளி (சிபிஎஸ்சி) நிர்வாகத்துக்கு திருச்சி முதன்மைக் கல்வி அதிகாரி, ‘ஏன் உங்கள் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது’ என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சிபிஎஸ்சி பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. மத்திய அரசின் பாடத்திட்டங்களே இங்கு பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தம், பல்வேறு நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது, கல்வி நிறுவனம் நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே, இச்சட்டதிருத்தம், சட்ட விரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதென அறி விக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந்தது.
உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நேற்று இந்த மனுவை விசாரித்தார். தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், திருச்சி முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோர் மனுதாரரின் மனுவுக்கு 8 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT