Published : 01 Dec 2014 10:15 AM
Last Updated : 01 Dec 2014 10:15 AM

தாம்பரம் அருகே கணவன்-மனைவியை தாக்கி நகை கொள்ளை

தாம்பரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவியை வெட்டி நகையை பறித்து சென்ற கொள்ளையனை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (45). இவரது மனைவி காயத்ரி. இவர்களது மகன் சஞ்சய்குமார் (12). காயத்ரியின் தாயார் வீடு தாம்பரம் புலிக்கொரடு பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் காலையில் இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புழலில் இருந்து தாம்பரத்துக்கு சென்றனர். பின்னர் இரவு 8 மணியளவில் புழலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

தாம்பரம் புலிக்கொரடு பகுதி மற்றும் மதுரவாயல் பைபாஸ் சாலையை இணைப்பதற்காக புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலை உள்ளது. அதில் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டுதான் சாலைக்கு வரவேண்டும். இதனால் காயத்ரியும், அவரது மகன் சஞ்சய்குமாரும் நடந்து சென்று பாலத்தில் ஏறி நின்றனர். மூர்த்தி, மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன், காயத்ரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த சங்கிலியை கழற்றிக் கொடுக்குமாறு மிரட்டினான்.

பயந்துபோன காயத்ரி அபயக்குரல் எழுப்ப, மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்த மூர்த்தி அதைக்கேட்டு வேகமாக ஓடிவந்தார். உடனே கொள்ளையன் காயத்ரியின் கையில் வெட்டி அவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்தான். ஓடிவந்த மூர்த்தி கொள்ளையனிடம் சண்டைபோட அவரையும் கத்தியால் வெட்டினான். இதில் நிலைகுலைந்த மூர்த்தி, ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

நிலைமையை உணர்ந்த சிறுவன் சஞ்சய்குமார் அருகேயிருந்த பாட்டியின் வீட்டுக்கு ஓடிச் சென்று உறவினர்களிடம் விஷயத்தைக் கூறினான். அவர்கள் அங்கு விரைந்து வந்து ரத்த காயத்தில் சாலையில் கிடந்த மூர்த்தியையும், காயத்ரியையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x