Published : 05 Dec 2014 10:25 AM
Last Updated : 05 Dec 2014 10:25 AM

கள்ளநோட்டு கொடுத்து பைக் வாங்கிய சகோதரர்கள்

திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிள் வாங்கிவிட்டு கள்ளநோட்டுகளை கொடுத்த சகோதரர்கள் 2 பேர் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் சலீம் என்பவர் பழைய மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் மையம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு அவரது கடைக்கு 3 பேர் வந்து ஒரு ஸ்கூட்டரை ரூ.22 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளனர். அந்த பணத்தை அவர் சரிபார்த்தபோது அதில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 14 இருந்தன. அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பதை சலீம் கண்டுபிடித்தார்.

பின்னர் இதுகுறித்து திருவல் லிக்கேணி போலீஸாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்து விட்டு, அந்த 3 பேருடன் பேசிக்கொண்டிருந்தார் சலீம். அப்போது போலீஸார் வருவதை பார்த்து உஷாரான 3 பேரும் தப்பி ஓடினர். அவர்களை போலீஸாரும், கடைக்காரர்களும் விரட்டிப் பிடித்தனர். இதில் 2 பேர் சிக்க, ஒருவர் மட்டும் தப்பிவிட்டார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சிக்கிய இருவரும் பெங்களூர் மவுலானா காம்பவுண்ட் ஹல்லி பகுதியை சேர்ந்த சையத் ஜமீல்(30), சையத் அஸ்கர்(32) என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிந்தது. தப்பி ஓடியவர் இவர்களின் மூத்த சகோதரர் சையத் வாசிம் என்பதும் தெரிந்தது.

சகோதரர்கள் 3 பேரும் பெங்களூரில் ஒரு ஜவுளிக் கடையில் தையல்காரர்களாக வேலை செய்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த லுக்மான், அஸீம்பாய் ஆகியோர் 3 பேரிடமும் கள்ளநோட்டுகளை கொடுத்து சென்னைக்கு அனுப்பியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சையத் ஜமீல், சையத் அஸ்கர் இருவரும் புழல் சிறையில் அடைக் கப்பட்டனர். கள்ளநோட்டுகளை கொடுத்தனுப்பிய லுக்மான், அஸீம்பாய் ஆகியோரையும், தப்பி ஓடிய சையத் வாசிமையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சகோதரர்கள் சையத் ஜமீல், சையத் அஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x