Published : 27 Dec 2014 10:10 AM
Last Updated : 27 Dec 2014 10:10 AM

அவதூறான கருத்துகளை பதிவிடும் வலைத்தளங்களை முடக்க வேண்டும்: சைபர் சொஸைட்டி ஆஃப் இந்தியா கோரிக்கை

சென்னை சமூக வலைத்தளங்களில் பிறர் மனம் புண்படும் படியான மற்றும் அவதூறான தகவல்களை பதிவிடும் நபர்களை கைதுசெய்யும் தகவல் தொழில்நுட்ப சீர்திருத்தச் சட்டப் பிரிவு 66-ஏ-யில் முறையான திருத்தங்கள் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இணையத்தில் பொய்யான தகவலை தெரிந்தே பதிவிடுதல், ஒருவரை முற்றிலுமாக புண்படுத் தக் கூடிய தகவல்களை பதி விடுதல், ஊறு விளைவிக்கும் என்று தெரிந்தே ஒரு தகவலை பதிவிடுதல். இந்தக் குற்றங்களை முதல் முறை செய்தால் 2 ஆண்டு கள் சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.

மீண்டும் அதே தவறை செய்தால் 3 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் அபராதம். இதுதான் தகவல் தொழில்நுட்ப சீர்திருத்தச் சட்டம் பிரிவு 66-ஏ-யில் உள்ள முக்கிய அம்சம். இந்தப் பிரிவின் கீழ், பால் தாக்கரே இறந்த சமயத்தில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்த 2 பெண்களை போலீ ஸார் கைது செய்தனர்.இந்த கைது நடவடிக்கைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை, டெல்லி உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் பிரிவு 66-ஏ-யை நீக்கக் கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை டி.ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநர் அல்லது செயலாளர் இவர்களில் யாரேனும் ஒருவரது உத்தரவுடன் துணை ஆணையர் அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி மட்டுமே கைது செய்ய முடியும் என இடைக் கால தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், டிசம்பர் 17-ல் நடந்த அந்த வழக்கின் விசாரணையின்போது, ‘சமூக வலைத்தளங்களில் தனி நபர் களால் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு அரசியல் எதிர்ப்பு விமர்சனங்கள் வந்தன என்பதற்காக அத்தகைய கருத்துகளை பதிவு செய்பவர் களை தண்டிக்கக் கூடாது என்பது தான் அரசின் இப்போதைய எண்ணம்.

அதே சமயம், பயங்கர வாத அமைப்பில் சேருங்கள் என யாராவது சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தால் அவர்கள் மீது பிரிவு 66-ஏ-யின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையம் என்ற ஒன்று மட்டுமே தணிக்கை இல்லாத ஊடகமாக இருப்பதால் அதை முடக்கக் கூடாது’ என தெரிவித்தார் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.

இந்த விவகாரம் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய சென்னை ‘சைபர் சொஸைட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், ‘‘ஏற்கெனவே இந்த வழக்கு தொடர் பான விசாரணையில் அவதூறான, கருத்துகளை, படங்களை வெளியி டும் வலைத் தளங்களை ஏன் முடக்கக் கூடாது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, ‘அது சாத்தியமில்லை: ஒன்றை முடக்கினால் அதேபோல் 100 வலைத்தளங்கள் உருவாகும்’ என கைவிரித்து விட்டது மத்திய அரசு.

பிரிவு 66-ஏ-யின் படி, போலீஸ் நினைத்தால் யாரையும் எளிதில் கைது செய்துவிட முடியும். அதி லுள்ள சரத்துகள் அப்படித்தான் உள்ளன. அதற்கு பதிலாக, அந்த பிரிவை செயல்படுத்துவது குறித்த தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத் தின் கீழ் ‘கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம்’ (CERT - INDIA) என்ற தன்னாட்சி அமைப்பு இருக்கிறது.வலைத் தளங்களை முடக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இவர் களுக்கு சட்டப்படியான அதிகாரம் உள்ளது. இவர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்தாலே வலைத் தள குற்றங்கள் குறைந்துவிடும்’’ என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x