Published : 02 Dec 2014 10:21 AM
Last Updated : 02 Dec 2014 10:21 AM

பச்சையப்பன் அறக்கட்டளையை தமிழக அரசே ஏற்க வலியுறுத்தல்

பச்சையப்பன் அறக்கட்டளையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திர சேகர், பச்சையப்பன் அறக் கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் சாந்தி ஆகியோர் சென்னையில் நிருபர் களிடம் நேற்று கூறியதாவது:

பச்சையப்பன் அறக்கட்டளை யின் கீழ் 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த அறக் கட்டளையின் சொத்து மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி ஆகும். ஆனால், மாணவர்கள் நலனுக்காக பல செல்வந்தர்களால் வழங்கப்படும் நிதி, அவர்களை சென்றடைய வில்லை. அறக்கட்டளை நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.

வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யவில்லை

ஆனால், அதே நிர்வாகிகள் தற்போதும் பதவியில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக அறக் கட்டளையின் வரவு - செலவு அறிக்கையை நிர்வாகிகள் தாக்கல் செய்யவில்லை.

அறக்கட்டளையில் நடந்து வரும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர் சாந்தி மற்றும் சேட்டு ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், நிர்வாகத்தினர் இவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பல முறைகேடுகளுடன் செயல்பட்டு வரும் பச்சையப்பன் அறக்கட்டளையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x