Last Updated : 15 Dec, 2014 11:54 AM

 

Published : 15 Dec 2014 11:54 AM
Last Updated : 15 Dec 2014 11:54 AM

தமிழகத்தில் பாமக தலைமையில் அரசியல் மாற்றத்துக்கான அணி: ராமதாஸ் பேட்டி

தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான அணி பாமக தலைமையில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நேற்று பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் "தி இந்து" விடம் கூறியதாவது:

கடந்த 2003 அதிமுக ஆட்சியின்போது பேருந்து நிழற்குடைகளில் விளம்பரம் செய்வதில், மாநகர போக்குவரத்துக் கழக அலுவலர்கள், சில தனியார் நிறுவன அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டனர். இது மிகப்பெரிய நிதி சீர்கேட்டையும், போக்குவரத்து கழக பொருளாதாரத்தில் அமிலத்தை ஊற்றி அழிக்கும் செயலாகும். உச்ச நீதிமன்றம் வெளிப்படையான நடைமுறை இல்லை எனக் கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதற்கு இது ஒரு உதாரணமாகும்.

மத்திய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மூடக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து, வறுமை குறைந்துள்ளது. இத்திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

உ.வே.சா. வீடு இடிப்புக்கு கண்டனம்

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் வாழ்ந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த வீட்டை தமிழக அரசு அவரது நினைவு இல்லமாகப் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தும், தற்போது வீடு இடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

குடிநீர் பிரச்சினை தீர்க்க . .

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை. திட்டப்பணிகளில் உள்ள சிக்கலைப் போக்கி அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு

அதிமுக ஆட்சியில் மாநில பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. விவசாயம், தொழிற்துறை ஆகியவற்றில் வளர்ச்சி பின்நோக்கி செல்கிறது. பாமக தலைமையில் 2016 அரசியல் மாற்றத்துக்கான அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மது, ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன்நிறுத்தி பிரச்சாரம் செய்வோம். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு சமுதாயத்துக்கான பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற முடியும்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x