Published : 03 Dec 2014 10:15 AM
Last Updated : 03 Dec 2014 10:15 AM

நேதாஜி பற்றிய உண்மைகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த உண்மைகளை மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய விடுதலைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்தவர். காங்கிரஸிலிருந்து வெளியேறி ஃபார்வர்டு பிளாக்கை தோற்றுவித்த அவர், நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். ஆப்கன் வழியாக ரஷ்யா, ஜெர்மன் சென்ற அவர், இறுதியாக ஜப்பான் போனார். அங்கிருந்து ரஷ்யா செல்வதற்காக 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி புறப்பட்டார். அவர் ஏறிய விமானம் சற்றுநேரத்தில் நெருப்புக்கோளமாக கீழே விழுந்தது. அதன்பின்னர் வந்த செய்திகள் அனைத்துமே மர்மமானவை.

நேரு பிரதமராக இருந்தபோது, நேதாஜி மரணம் குறித்து விசாரிக்க 1956-ம் ஆண்டு ஷா நவாஸ்கான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழுவுக்குள் முரண்பாடுகள் எழுந்தது. இதையடுத்து, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, முன்னாள் தலைமை நீதிபதி கோஸ்லா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அந்தக் குழு நேதாஜி இறந்ததாக அறிவித்தது.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு, கொல்கத்தாவில் உள்ள ஆசியக் கழகம், மாஸ்கோ சென்று 30 ஆண்டுகால ஆவணங் களை ஆய்வு செய்தது. அதனடிப் படையில், ‘மாஸ்கோவில் உள்ள ரஷ்ய உளவுத்துறையின் தலைமையகத்தில் உள்ள 2 கோப்புகளில் நேதாஜி பற்றிய உண்மைகள் உள்ளன. 1945, 47-ம் ஆண்டுகளில் இருந்த ரஷ்ய ராஜதந்திரிகள் நேதாஜி பற்றிய உண்மையைக் கூறியுள்ளனர்’ என்று அறிக்கை வெளியிட்டது.

இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட மறுத்தது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கடந்த ஜனவரியில் நடந்த நேதாஜியின் 117-வது பிறந்த நாள் விழாவில் பேசிய இன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நேதாஜி மறைவு குறித்த உண்மைகளை அறிந்து கொள்ள முடியாமல் இந்தியாவின் அனைத்து மக்களும் பொறுமையின் எல்லைக்கே சென்று கவலைப்படுகின்றனர். எனவே, உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்” என்று கூறினார்.

ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் முறையாக விண்ணப்பித்தும், உலக நாடுகளுடனான உறவை காரணம் காட்டி நேதாஜி பற்றிய 2 முக்கிய ஆவணங்களை வெளியிட நரேந்திர மோடி அரசு மறுத்துவிட்டது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நேதாஜி படம் இல்லாத வீடே கிடையாது. எனவே, கோடான கோடி பேர் எதிர்பார்க்கும் நேதாஜி குறித்த உண்மைகளை மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x