Published : 01 Dec 2014 08:50 AM
Last Updated : 01 Dec 2014 08:50 AM

ஜன்னலை உடைத்து வங்கியில் கொள்ளை: போலீஸார் வந்ததால் 37 கிலோ தங்கம் தப்பியது

புதுக்கோட்டை அருகே தனியார் வங்கியிலிருந்து 37 கிலோ நகைகளை திருடிய மர்மநபர் போலீஸாரைக் கண்டதும் மூட்டையை வீசிவிட்டு தப்பினார்.

புதுக்கோட்டை- திருச்சி சாலையில் உள்ள குளத்தூரில் கீரனூர் காவல் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன், இளை ஞர் காவல் படையைச் சேர்ந்த கார்த்திக்ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் அவ்வழியாக ஒரு மூட்டையை சுமந்து வந்த மர்ம ஒரு நபர் போலீஸாரைக் கண்டதும் மூட்டையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.

சந்தேகம் அடைந்த போலீஸார், மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது அதில் இரும்பு பெட்டிக்குள் பொட்டலங் களாக மடிக்கப்பட்ட நிலையில் தங்க நகைகள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி. இ.எஸ்.உமா தலைமையிலான போலீஸார் வந்தனர். விசாரணையில், குளத்தூர் கடைவீதியில் உள்ள ஒரு தனியார் வங்கியிலிருந்து இந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

போலீஸார் அளித்த தகவலின் பேரில் வங்கி மேலாளர் அனுராதா உள்ளிட்ட அலுவலர்கள் வந்து வங்கியின் உள்ளே இருந்த இரும்பு லாக்கர்களை சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த ரூ. 10 கோடி மதிப்பிலான 37 கிலோ தங்க நகைகள் கொள்ளைபோயிருந்தது.

வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த மர்மநபர் லாக்கரை உடைத்து அதிலிருந்த நகைகளை திருடி மூட்டையாக கட்டி வெறியேறியதும் பின்னர் போலீஸாரைப் பார்த்ததும் மூட்டையை வீசிச்சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ராமசுப்பிரமணி விசாரித்தார். திருட்டு சம்பவம் நடைபெற்ற அன்று பணியில் இல்லாத வங்கியின் காவலர் சிவசாமியிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x