Published : 16 Dec 2014 02:37 PM
Last Updated : 16 Dec 2014 02:37 PM

இலங்கை மீனவர்கள் 30 பேர் டிச.22-ல் விடுதலை: முதல்வர் ஓ.பி.எஸ்.

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 30 பேரும் அவர்களது 19 படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் டிசம்பர் 22-ம் தேதியன்று விடுதலை செய்ய இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில், "கடந்த 1-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் வெளியுறவுச் செயலர் தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதங்களில், இலங்கை மீனவர்கள் 30 பேரையும் அவர்களது படகுகளையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும். இதன் மூலம் இலங்கையுடன் நல்லிணக்கம் ஏற்படும். இதுவே, அங்குள்ள சிறைகளில் இருக்கும் 66 தமிழக மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட 81 படகுகளையும் மீட்க உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுவிப்பதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த காலங்களில் இலங்கை மீனவர்களை தமிழக அரசு தானாகவே முன்வந்து விடுவித்திருக்கிறது.

ஆனால், இம்முறை இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு மத்திய அரசு தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மாறாக, இலங்கையிடம் அல்லவா தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இந்தியா வலியுறுத்தியிருக்க வேண்டும்.

இருப்பினும், இலங்கை மீனவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை தங்கள் உறவுகளுடன் கொண்டாடும் வகையில் டிசம்பர் 22-ல் அவர்களை விடுவிக்க முயறிசிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 66 பேரையும், அவர்களது 81 படகுகளையும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னரே விடுவிக்க இந்தியப் பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x