Published : 04 Dec 2014 09:57 AM
Last Updated : 04 Dec 2014 09:57 AM
பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள் ளதாவது: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய பாஜக அரசு 2-வது முறையாக உயர்த்தி யுள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.2.25-ம் டீசல் மீதான உற்பத்தி வரி ஒரு ரூபாயும் உயர்ந்துள்ளது. இதன்மூலம் ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட முடியும் என்று சொல்லப்படுகிறது. வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயராது என்று மத்திய அரசு சொல்வது ஏமாற்று வேலை யாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோலிய பொருட்களின் விலை தானாக குறையும் என்று கூறித்தான் மத்திய அரசு, டீசல் மீதான கட்டுப்பாட்டை விலக்கியது. கடந்த ஐ.மு.கூட்டணி ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 117 டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.12 அரசு மானியமாக கொடுத்தது. இதனால், 2012-13 நிதியாண்டில் மட்டும் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 29 கோடி அளவுக்கு அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 67 டாலராக குறைந்துள்ளது. இது காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட 40 சதவீதம் குறைவாகும். இந்த வீழ்ச்சியின் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25-ம், டீசல் ரூ.30-ம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு பெயரளவுக்கு 90 காசுகள் மட்டுமே குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு ஈடாக விலையை குறைக்காமல், உற்பத்தி வரியை அதிகரித்து வருவாய் ஈட்டுவது, மத்திய அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது. பாஜக அரசின் இந்த முடிவு கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT