Published : 24 Nov 2014 12:23 PM
Last Updated : 24 Nov 2014 12:23 PM
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 78 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலையாகி ஊர் திரும்பியுள்ள இந்த வேளையில், இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்துள்ளது வேதனைக்குரியது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழக மீனவர்கள் ஐந்து பேர் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்தமைக்காக தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளையில், தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதை தங்களுக்கு கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
கச்சத் தீவு அருகே நடுக்கடலில் நின்று கொண்டிருந்த படகினை (ஞாயிற்றுக்கிழமை) 23-ம் தேதியன்று இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றி, அதிலிருந்த மீனவர்கள் 4 பேரைச் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர். மேலும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த இரு விசைப்படகுகளையும் கைப்பற்றி, அதிலிருந்த 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் நேற்று (23-ம் தேதி) சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்கள் உள்பட இலங்கையின் பல்வேறு சிறைகளில் உள்ள 38 மீனவர்களையும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட 78 படகுகளையும் மீட்க பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT