Published : 14 Nov 2014 10:26 AM
Last Updated : 14 Nov 2014 10:26 AM
சென்னை மெட்ரோ ரயில் பணியின்போது, அண்ணாசாலையில் உள்ள பிஆர் அண்ட் சன்ஸ் நிறுவன கட்டிடத்தின் பின்புறத்தில் குறிப்பிட்ட பகுதி இடிந்துவிழும் ஆபத்து இருப்பதாக ஐஐடி நிபுணர் குழு கருத்து தெரிவித்தது. அதன் அருகில் உள்ள மற்ற கட்டிடங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்படி கட்டிடத் தின் பின்புறத்தில் 894 சதுரஅடி அளவுக்கு இடித்துவிடும்படி சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பிஆர் அண்ட் சன்ஸ் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, அக்கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிப்பதற்காக 2 சிவில் இன்ஜி னீயர்கள், ஒரு அட்வகேட் கமிஷனர் கொண்ட குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது. இரு சிவில் இன்ஜினீயர்களில் ஒருவர் பிஆர் அண்ட் சன்ஸ் நிறுவன கட்டிடம் வலுவாக இருப்பதாகவும், மற்றொருவர் வலுவிழந்து இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராம சுப்பிரமணியன் இந்த வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:
பிஆர் அண்ட் சன்ஸ் நிறுவன கட்டிடத்தின் பின்புறம் உள்ள 894 சதுரஅடி ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐஐடி நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது. அண்மையில் பல கட்டிடங்கள் இடிந்து உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. சதுரஅடி அளவு மட்டும் இடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த இடம் போக, 14 ஆயிரம் சதுர அடி இடம் பிஆர் அண்ட் சன்ஸ் நிறுவனம் வசம் இருக்கும். அதனால் பெரிய இழப்போ, அசௌகரியமோ ஏற்படப் போவதில்லை.
வலுவிழந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ள கட்டிடத்தின் பின்பகுதி மெட்ரோ ரயில் பணியின்போது இடிந்து விழுந்தால், அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அச்சுறுத் தல் உள்ளது. எனவே, மாநகராட்சி நோட்டீஸை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படு கிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT