Published : 07 Jul 2017 09:12 AM
Last Updated : 07 Jul 2017 09:12 AM

கதிராமங்கலத்தில் 6-வது நாளாக கடையடைப்பு: பொது குடிநீர் குழாயில் எண்ணெய் கசிவு- பொதுமக்கள் உண்ணாவிரதம்; போராட்டம் தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் நேற்று பொது குடிநீர் குழாயிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும், போராட்டத் தின்போது கைது செய்யப்பட்டவர் களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அக்கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கதிராமங்கலம் மணல்மேட்டுத் தெருவில் நேற்று காலை 6 மணிக்கு பொது குடிநீர் குழாயில் பெண்கள் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் சென்றனர். தண்ணீர் பிடித்த பாத்திரங்களில் எண்ணெய் படலம் மிதந்தது. தண்ணீரில் எண்ணெய் வாடை அடித்தது. குடிநீர் குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம்தான் காரணம் எனக் கூறி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகமாக கூடியதால் கல்லணை - பூம்புகார் சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குடிநீரில் எண்ணெய் வாடை

பாத்திரங்களில் பிடித்து வைத் திருந்த தண்ணீரை பொதுமக் கள் அப்படியே வைத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தும் திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் வந்து குடிநீரை சோதித்து பார்த்தபோது, அதில் எண்ணெய் கலந்த வாடை அடித்தது தெரியவந்தது.

இதையடுத்து, குடிநீர் குழாயிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் குழாயை பூமியிலிருந்து பொக்லைன் உதவியுடன் தோண்டி அங்கு சோதனை நடத்தியபோது, அங்கு தண்ணீர் நன்றாக இருந்தது. குழாயில் எந்த இடத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதை அவர்கள் கண்டறியவில்லை.

இதற்கிடையில், மணல்மேட்டு தெரு மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வேண்டும், ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த தெருவின் முகப்பு பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வந்த தண்ணீர் லாரியை மக்கள் திருப்பி அனுப்பினர்.

அதன்பிறகு, எந்த குழாயிலி ருந்து குடிநீரோடு எண்ணெய் படலம் சேர்ந்து வந்ததோ அந்த குழாயை 100 மீட்டர் தூரத்துக்கு முழுமையாக மாற்றிவிட்டு, வேறு குழாயை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் உடனடியாக பதித்தனர்.

நெசவாளர்கள் உண்ணாவிரதம்

இந்நிலையில், நெசவாளர் சமூகத்தினர் சார்பில் கதிரா மங்கலம் அய்யனார் கோயிலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், 200 பெண் கள் உட்பட 300 பேர் கலந்துகொண் டனர். மேலும், பல்வேறு இடங் களிலிருந்து வந்திருந்த கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட் டோர் ஆதரவு தெரிவித்ததுடன் போராட்டத்தில் கலந்துகொண் டனர்.

மாணவர்கள் பேசியபோது, “ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியதுபோல இந்த மண் ணைக் காக்க வரும் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதற்காக, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்” என்றனர்.

கதிராமங்கலத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று 6-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கதிராமங்கலம் அய்யனார் கோயிலில் நேற்று நடைபெற்ற நெசவாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசும் கல்லூரி மாணவர்.

படங்கள்: வி.சுந்தர்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x