Published : 14 Nov 2014 10:05 AM
Last Updated : 14 Nov 2014 10:05 AM
பிளஸ் டூ அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி காண வேண்டும் என்பதற்காக அரசு உதவிபெறும் பள்ளிகள் 11-ம் வகுப்பு மாணவர்களைத் திட்டமிட்டே பெயிலாக்கி வருவது தெரியவந்துள்ளது.
இதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி.முத்தரசன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெற்றுள்ள தகவல்களை ‘தி இந்து’ செய்தியாளரோடு பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு தேர்ச்சி பெற 15 முதல் 25 மதிப்பெண்கள் வரைதான் பள்ளியின் ஸ்டாப் கவுன்சில் நிர்ணயித்துள்ளது. ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகள் 30 முதல் 70 மதிப்பெண்கள் வரை நிர்ணயித்துள்ளன. இதற்கு காரணம், இந்தப் பள்ளிகள் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றன. அதற்காக 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற அதிக மதிப்பெண்களை இலக்காக வைத்து, சற்று சுமாராக படிக்கும் மாணவர்களைத் திட்டமிட்டே பெயிலாக் குகிறார்கள்.
அவ்வாறு பெயிலாகும் மாணவர் களின் விடைத்தாள்களை முறையாக பெற்றோர்களிடம்கூட காட்டுவதில்லை. அதிகாரிகளிடம் சென்று முறையிட்டா லும், 11-ம் வகுப்பு தேர்ச்சி பெற அப்பள்ளியின் ஸ்டாப் கவுன்சில் எவ்வளவு மதிப்பெண் நிர்ணயித் துள்ளதோ அதுவே சரி என்று கூறுகிறார்கள்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் 600 மாணவர்கள் படித்தால், அவர்களில் சராசரியாக 80 மாணவர்கள் பெயிலாக்கப்படு கிறார்கள். சில தனியார் பள்ளிகளும் இப்படி செய்தாலும், தங்கள் பள்ளியில் நிறைய பிள்ளைகளைச் சேர்க்க வேண்டுமென்ற ஆசையில் அரசு உதவிபெறும் பள்ளிகளே இதை மிகுதியாய் செய்து வருகின்றன. இதனால் பல மாணவர்கள் 11-ம் வகுப்பில் பெயிலாவதால், பன்னிரெண்டாம் வகுப்பைத் தொடர முடியாமல் போகிறது.
இந்நிலை மாற வேண்டுமானால், தமிழக பள்ளிக்கல்வி நிர்வாகம் 11-ம் வகுப்பு தேர்ச்சி பெற அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துக்கும் ஒரே அளவில் மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT