Last Updated : 11 Nov, 2014 05:36 PM

 

Published : 11 Nov 2014 05:36 PM
Last Updated : 11 Nov 2014 05:36 PM

மீனவர்கள் தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராமேசுவரத்தை சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி, விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவி அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். பின்னர், போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மீனவர்கள் சார்பில் வழக்காடுவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கடந்த அக்டோபர் 30 அன்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ராமேசுவரத்தில் 12 தினங்களாக தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான 20 லட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் கடந்த சனிக்கிழமை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சிங்கள மொழியில் இருந்தால், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

மேல்முறையீட்டு வழக்கில் மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்களின் ஒருவராக எஸ்.அனில் சில்வாவை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இது குறித்து 'தி இந்து' செய்தியாளரிடம் செவ்வாய்கிழமை வழக்கறிஞர் எஸ்.அனில் சில்வா கூறும்போது, "திங்கட்கிழமையே மேல்முறையீடு செய்ய இருந்தோம். ஆனால் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு ஆவணங்களை பார்வையிட விரும்பியது. செவ்வாய்க்கிழமை தூதரகத்தின் அனுமதிக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த வழக்கை விசாரணை தேதியை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x