Published : 20 Nov 2014 11:59 AM
Last Updated : 20 Nov 2014 11:59 AM

சாலை தடுப்பில் பைக் மோதி இளைஞர் பலி - நண்பர் படுகாயம்: கழுத்து உடைந்து தலை தொங்கிய பரிதாபம்

சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன்சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஜாம்பவான் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (24). இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க் கெட்டில் வேலை பார்த்தார். நுங்கம்பாக்கம் அபிபுல்லா சாலையில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கி இருந்தார்.

தினமும் காலையில் மெரினா கடற்கரைக்கு சென்று உடற்பயிற்சி செய்வது வீரமணி மற்றும் அவரது நண்பர்களின் வழக்கம். நேற்று காலை 5.30 மணிக்கு வழக்கம்போல வீரமணியும் நண்பர்கள் ராஜ் குமார், ரூபன், சிவானந்தன் ஆகியோர் மெரினாவிற்கு புறப்பட்டு சென்றனர். வீரமணியும், நண்பர் ராஜ்குமாரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், ரூபனும், சிவானந்தனும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் கடற்கரைக்கு புறப்பட்டனர்.

வீரமணி மோட்டார் சைக்கிளை ஓட்ட ராஜ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். ஸ்டெல்லா மேரி கல்லூரி அருகே கதீட்ரல் சாலை-பின்னி சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிள் வந்தபோது நிலை தடுமாறிய வீரமணி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிளை வேகமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட வீரமணி அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி விழுந்தார். மின் கம்பத்தில் வீரமணியின் கழுத்து மோதியதில் கழுத்து எலும்பு உடைந்து அவரது தலை தனியாக தொங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற ராஜ்குமார் தடுப்பு சுவரில் மோதியதில் ஒரு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தலையிலும் காயம் ஏற்பட்டது.

பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ரூபனும், சிவானந்தனும் இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x