Published : 30 Jun 2015 01:03 PM
Last Updated : 30 Jun 2015 01:03 PM

2016-க்கு முன்னோட்டமான ஆர்.கே.நகரில் மகத்தான வெற்றி: ஜெயலலிதா மகிழ்ச்சிக் கருத்து

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருப்பது 2016 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என ஜெயலலிதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பு என்பது பிறரை நேசிக்கச் செய்யும் பண்பு, அந்த நேசப் பண்பு அனைவரையும் அரவணைக்கும் பாசப் பண்பு. இந்த அன்பை நான் தமிழக மக்களிடத்தில் வைத்து இருக்கிறேன். அவர்களும் என் மீது வைத்து இருக்கிறார்கள்.

அதனால் தான், என்னுடைய அன்பான வேண்டுகோளினை ஏற்று, இந்த இடைத்தேர்தலில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெறச் செய்து இருக்கிறார்கள் எனது அன்புக்குரிய ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்கள்.

என்னுடைய வார்த்தைக்கு மதிப்பளித்து, என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், என்னை மகத்தான வெற்றி பெறச் செய்த எனது அன்பார்ந்த ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடைத்தேர்தல் வெற்றியின் மூலம், "மக்கள் சக்தியை மட்டும் மூலதனாமக் கொண்ட இயக்கங்கள் மட்டுமே இன்று உருக்குலையாமல், துருப்பிடிக்காமல், தேய்ந்துவிடாமல், மாய்ந்துவிடாமல் அசைக்க ஒண்ணாத கோட்டை கொத்தளமாக புத்தொளி வீசுகிறது" என்று அண்ணா அன்று சொன்ன அமுதமொழி இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாக்காளப் பெருமக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்களின் எதிர்பார்ப்புகள், தேவைகளை, வசதிகளை நிறைவேற்றித் தர தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்ற உறுதியை நான் இந்தத் தருணத்தில் அளிக்கிறேன்.

எனக்காக தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கும்ம் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x