Published : 20 Jun 2015 05:19 PM
Last Updated : 20 Jun 2015 05:19 PM
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக ஒற்றைச்சாளர முறையில் ஜூலை 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கலந்தாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவ-மாணவிகளின் தரவரிசைப் பட்டியல், மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் நாளை (திங்கள்கிழமை) முதல் அனுப்பப்படும். மேலும், அழைப்புக்கடிதத்தை மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.
கலந்தாய்வு நாள், பாடப்பிரிவு விவரம் வருமாறு:
ஜூலை 1 (புதன்) - ஆங்கில மொழியில் படித்த அனைத்து பாடப்பிரிவு மாணவிகள், தெலுங்கு மற்றும் உருது மொழியில் படித்த அனைத்துப் பாடப்பிரிவு மாணவ-மாணவிகள், சிறப்புப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்)
ஜூலை 2 (வியாழன்) - தொழிற்பிரிவு மற்றும் கலைப்பிரிவு மாணவிகள்
ஜூலை 3, 4 (வெள்ளி, சனி) - அறிவியல் பிரிவு மாணவிகள்
கலந்தாய்வு தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும். கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு, பிளஸ் டூ சான்றிதழ்கள், சாதி சான்று, இருப்பிடச்சான்று, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர்கள் அதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT