Published : 19 Nov 2014 06:06 PM
Last Updated : 19 Nov 2014 06:06 PM

5 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அதிபர் ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கினார்; இன்று நாடு திரும்புகின்றனர்

இலங்கையில் போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு அதிபர் ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கினார்.

இதையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ள 5 மீனவர்களும், இன்று தமிழகம் திரும்புகின்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தியதாக தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டனர். அவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி மரண தண்டனை விதித்தது.

மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான சட்ட ரீதியிலான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன. 5 பேரின் சார்பில் கடந்த 11-ம் தேதி மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலை யில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சவுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.

அதைத் தொடர்ந்து, மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால், இலங்கை அதிபர் பொது மன்னிப்பு வழங்கி மீனவர் களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்தனர். மேல் முறையீட்டு மனுவை நேற்று முன்தினம் மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இதை யடுத்து 5 மீனவர்களுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று ரத்து செய்தார்.

அதிபரின் செய்தித்தொடர் பாளர் மோகன் சமரநாயகே கூறும்போது, “5 தமிழக மீனவர் களுக்கு அதிபர் ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அவர்களை சிறையிலி ருந்து விடுவித்துள்ளோம். அனை வரும் இந்திய தூதரக அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளனர்” என்றார்.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது: இலங்கை அதிபரின் உத்தரவையடுத்து 5 மீனவர்களும் விடுவிக்கப் பட்டுள்ளனர். இதற்காக ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதிபரின் இந்நடவடிக்கை இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உதவும். மீனவர்கள் 5 பேரும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து விடுவிக்கப் பட்ட 5 மீனவர்களையும் சந்தித்த இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா, அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். விரை வில் நேபாளத்தில் நடைபெற வுள்ள சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் ராஜபக்சவும் சந்திக் கவுள்ளனர். இந்நிலையில் மீன வர்கள் 5 பேரும் விடுவிக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீனவ குடும்பங்கள் நன்றி

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய ஒத்துழைத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய, மாநில, இலங்கை அரசுக்கும் மீனவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதும் ராமேசுவரம் மீனவர்கள் குடும்பத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மீனவர்கள் விடுதலை குறித்து மீனவர் குடும்பத்தின் சார்பில் மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவி இருதயமேரி கூறியது: இன்று எங்கள் மீனவர்கள் நிரபராதிகளாக உணரப்பட்டு தங்கள் தாயகத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி இலங்கை அதிபருக்கு மீனவர்கள் பற்றி எடுத்துரைத்து, விடுதலை செய்ய வைத்திருக்கிறார். பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ராஜபக்ச, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவர் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்.

விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்கள் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை மதியம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x