Published : 14 Mar 2014 06:26 PM
Last Updated : 14 Mar 2014 06:26 PM

சிறிய பஸ்களில் இலைகள்: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு

சிறிய பஸ்களில் வரையப் பட்டுள்ள இலை படங்களை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழக சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகள் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையைப் போல உள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க வேண்டும் என்றும் கோரி தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளா ளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

அதேபோல் அம்மா குடிநீர் பாட்டில்கள் மற்றும் அரசு சொத்துகளில் இடம் பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா படங் களையும், இரட்டை இலையைப் போன்ற இலை அமைப்புகளையும் அகற்ற வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்று அவர் தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டி ருந்தார்.

தனது கோரிக்கை மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. சிறிய பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க உத்தர விட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகளை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

அரசு சிறிய பஸ்களில் வரையப் பட்டுள்ளது இரட்டை இலை சின்னமே அல்ல. இரட்டை இலை சின்னத்தில் இரண்டு இலைகள் மட்டுமே இருக்கும். ஆனால் சிறிய பஸ்களில் வரையப்பட்டிருக்கும் படங்களில் நான்கு இலைகள் உள்ளன.

இரட்டை இலை சின்னத் துக்கும், அரசு பஸ்களில் வரையப்பட்டிருக்கும் இலைகள் படத்துக்கும் ஏராளமான வித்தி யாசங்கள் உள்ளன.

இந்நிலையில் திமுகவினர் அளித்திருந்த கோரிக்கை மனு அடிப்படையில் சிறிய பஸ்களில் வரையப்பட்டிருக்கும் இலைகள் படங்களை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிடும் முன்பு எங்கள் கட்சியின் கருத்தை கேட்டறியவில்லை.

கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்த போதுதான் அதுபற்றி எங்களுக்கு தெரிய வந்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பசுமை யான இலைகள்தான் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருவதற்கு முன்பாகவே சிறிய பஸ்களின் இயக்கம் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சட்ட விரோதமானதாகும்.

ஆகவே, சிறிய பஸ்களில் வரையப்பட்டிருக்கும் இலைகள் படங்களை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த தடை விதிப்பதோடு, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்துமாறு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரியிடம் மூத்த வழக்கறிஞர் எஸ்.முத்துக் குமாரசாமி வெள்ளிக்கிழமை முறையீடு செய்தார். மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பசுமை யான இலைகள்தான் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருவதற்கு முன்பாகவே சிறிய பஸ்களின் இயக்கம் தொடங்கிவிட்டன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x