Last Updated : 21 Mar, 2014 11:10 AM

 

Published : 21 Mar 2014 11:10 AM
Last Updated : 21 Mar 2014 11:10 AM

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று இறுதி வாதம் தொடங்குமா?

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதிவாதத்தை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவார் என தெரிகிறது.

அதே நேரத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தனக்கு விதித்த அபராதத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுத்த மனு மீது இன்று விசாரணை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை மார்ச் 7-ம் தேதி தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார். உடல்நிலை சரியில்லை எனக் கூறி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனைத் தொடர்ந்து இறுதிவாதம் தொடங்க அவருக்கு 3 முறை வாய்ப்புகளை வழங்கினார்.

இருப்பினும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது உடல்நிலை முழுமையாக குணமடையாததால், இறுதி வாதம் செய்ய‌வில்லை. எனவே நீதிபதி டி'குன்ஹா கடந்த 15-ம் தேதி இறுதிவாதம் செய்யாத அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு அவருடைய ஒருநாள் ஊதியத்தை(ரூ.60 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதித்தார்.

மேலும் மார்ச் 21-ம் தேதி (இன்று) அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை கட்டாயம் தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அபராதத்திற்கு எதிரான மனு

இந்நிலையில் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்ததை எதிர்த்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் தொடுத்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் வியாழக்கிழமை மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், பவானி சிங் இன்று சொத்துகுவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி இறுதிவாதத்தை தொடங்குவாரா அல்லது உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள அபராதத்திற்கு எதிரான மனு மீதான விசாரணையில் ஆஜராகி வாதாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x