Published : 19 Nov 2014 10:54 AM
Last Updated : 19 Nov 2014 10:54 AM

பெண் விவகாரத்தில் ஐயப்ப பக்தர் கொலை: சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் 3 பேர் கைது

மயிலாப்பூரில் பெண் விவகாரத்தில் இளைஞரை வெட்டி கொன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (21). கார் டிரைவர். போஸ்டர் ஒட்டும் தொழிலும் செய்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் லஸ் சர்ச் சாலை காமதேனு திரையரங்கம் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர் சாம் வின்சென்ட் மற்றும் போலீஸார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி கொலை செய்தவர் களை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதில் அதே பகுதியை சேர்ந்த சுகுமாரன், தீபன், சந்தோஷ் குமார் ஆகியோர் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் இரவே கைது செய்தனர்.

காதலால் வந்த மோதல்

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் விவகாரத்தில் கொலை செய்தது தெரிந்தது. கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின் வீட்டருகே உள்ள ஒரு பெண்ணை கார்த்திக் காதலித்துள்ளார். அதே பெண்ணை சந்தோஷும் காதலித்துள்ளார். இதனால் கார்த்திக்-சந்தோஷ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்காக இருவரும் பலமுறை அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தன்னை கொலை செய்ய சந்தோஷ் திட்டமிட்டதை அறிந்து ஊட்டிக்கு சென்று 2 மாதங்கள் தங்கியிருக்கிறார் கார்த்திக்.

இந்நிலையில், கார்த்திகை மாதம் தொடங்கியதால் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்து இருந்தார் கார்த்திக். இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் சென்னை வந்தார். கார்த்திக் வந்ததை அறிந்த சந்தோஷ், தனது நண்பர்கள் சுகுமாரன், தீபன் ஆகியோர் உதவியுடன் கார்த்திக்கை வெட்டி கொலை செய்துவிட்டார் என்று போலீஸார் தெரிவித்துள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x