Published : 20 Jun 2015 08:56 AM
Last Updated : 20 Jun 2015 08:56 AM
போலி ஆவணம் தயாரித்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்றவரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வேலூர் சத்துவாச்சாரி பகுதி 1, வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் டாக்டர் நவீன். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இவருக்கு 36 சென்ட் காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் வேலூரைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தரை வாடகையாக மாதம் ரூ.5 ஆயிரம் செலுத்துவதாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஒப்பந்தப்படி தரை வாடகையை பல மாதங்களாக இம்மானுவேல் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இடத்தை காலி செய்யுமாறு உரிமையாளர் நவீன் கூறியுள்ளார். அதற்கு இம்மானுவேல், இடம் தனக்குச் சொந்தம் என்று கூறி போலி ஆவணங்களை தயாரித்தார்.
இது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் இம்மானுவேல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் இடத்தை காலி செய்ய மறுத்ததோடு, டாக்டர் நவீனை அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து எஸ்.பி. செந்தில்குமாரியிடம் நவீன் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.
அதன்பேரில் விசாரணை நடத்தியபோது, இம்மானுவேல் போலி ஆவணம் தயாரித்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள இடத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து, இம்மானுவேலை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT