Published : 05 Nov 2014 04:53 PM
Last Updated : 05 Nov 2014 04:53 PM
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய விவகாரத்தையொட்டி, சட்டப் பேரவையின் அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என மீனவப் பிரநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், ராமேசுவரம் மீனவப் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ கூறியது:
"கடந்த நவம்பர் 28, 2011 அன்று ராமேசுவரத்தை சார்ந்த எமர்சன், பிரசாத், லாங்லெட், வில்சன் மற்றும் அகஸ்டஸ் ஆகிய தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கிளாடுவின் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, எல்லை தாண்டி வந்தவர்கள் என்ற வகையில், குற்றஞ்சாட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக, பொய்யான வழக்கு புனைந்து இலங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தமிழக அரசு உளவுத்துறை மூலம், பல்வேறு நிலைகளில் உண்மை நிலையை விசாரித்து, அதன் பேரில் 5 மீனவர்களும் குற்றமற்றவர்கள் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்து, அந்த அறிக்கை இலங்கை அரசுக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு தினம் ரூ. 250 வீதம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்க அரசாணை பிறப்பித்ததுடன், குடும்பப் பிள்ளைகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் ஆணை பிறப்பித்தது. மேலும் தமிழக அரசு நிதி வழங்கி இலங்கை வழக்கறிஞர்கள் மூலமாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கையும் நடத்தி வந்தது.
அக்டோபர் 30- அன்று இலங்கை உயர் நீதிமன்றத்தால் தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மீனவர்களின் தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்யச் செய்து, அவர்களை விரைவில் மீட்டுத்தரும் என மீனவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
தமிழக சட்டப் பேரவையின் அவசரக் கூட்டத்தை கூட்டி மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் இலங்கை அரசை சுட்டிக்காட்டும் வகையில் மிகக் கடுமையான வாசகங்கள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT