Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM

3 பேரின் தூக்கு தண்டனையைக் குறைக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை: முதல்வர்

முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்ட னையாக குறைக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீ்ர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது, மத்திய அரசில் அங்கம் வகித்த கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயல லிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21.5.1991-ல் பெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி, ஸ்ரீஹரன் என்ற முருகன், சுதேந்திர ராஜா என்ற சாந்தன், பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுளாகக் குறைத்தும் மீதமுள்ள 19 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து 8.10.1999-ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர்கள் அளித்த கருணை மனுக்களை

27.10.1999-ல் தமிழக ஆளுநர் நிராகரித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் வழக்கு தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கருணை மனுக் களை நிராகரித்து ஆளுநர் பிறப்பித்த ஆணையை தள்ளுபடி செய்ததோடு, தமிழக அமைச்சரவையின் ஆலோசனை யைப் பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டது.

திமுக அமைச்சரவை முடிவு

இந்தத் தீர்ப்பின்படி, அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் 19.4.2000-ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ‘நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கிணங்க, அவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது’ என்று தீர்மானிக்கப்பட்டது. திமுக அமைச்சரவை முடிவுக்கு 21.4.2000-ல் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

பின்னர் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அளித்தனர். அந்த கருணை மனுக்களை 28.4.2000 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது.

11 ஆண்டாக நடவடிக்கை இல்லை

அந்தக் கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பிறகு கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாக 12.8.2011 நாளிட்ட கடிதத்தின் மூலம், தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்தத் தகவலை கைதிகளுக்கு தெரிவிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில், கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

சட்டநுணுக்கம் அறியாத கருணாநிதி

இந்தச் சூழலில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என்று தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்த முன்னாள் முதல் வர் கருணாநிதியும் சட்ட நுணுக்கங்களை ஆராயாமல், இவர்களை காப்பாற்ற நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகைகள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

இரட்டை வேடம்

29.8.2011-ல் நடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் கருணாநிதி யின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டினேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் மன்னிப்பு அளிக்க முடியும். இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதியிருந்தால், 2000-ம் ஆண்டில் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும் என்பதை தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், மூன்று பேரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை வலியுறுத்தி நான் முன்மொழிந்த தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வரை, அதாவது மார்ச் 2013 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்போது மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தவில்லை.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x