Published : 19 Jul 2015 11:12 AM
Last Updated : 19 Jul 2015 11:12 AM

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை, மின்துறையில் எள்முனை அளவுகூட குற்றம் நடைபெறவில்லை என்று மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி, அதிமுக அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் நடை பெற்றது. கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் ஜெய லலிதாவின் உத்தரவுப்படி மின் வெட்டுக்கு தீர்வு கண்டுள்ளோம். ஆனால் மின்துறையில் ரூ.1 லட்சம் கோடி ஊழல், கூடுதல் மின்சாரம் வாங்கியதில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். இதற்கு ஏற்கெனவே விரிவாக விளக்கம் அளித்திருக்கிறேன்.

திமுக ஆட்சியில் கூடுதல் விலைக்கு 20,355 மில்லியன் யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. அதிமுக ஆட்சியில் இதுவரை 11,075 மில்லியன் யூனிட் மட்டுமே கொள்முதல் செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் 5,346 மெகாவாட் மின்சாரம் கூடுதலாத விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 1100 மெகாவாட் மட்டுமே வாங்கப்படும். மீதமுள்ள மின்சாரம் உற்பத்தி மூலம் பெறப்படும்.

தமிழகத்தில் மின்துறையில் எள்முனை அளவுக்குகூட குற்றம் நடக்கவில்லை. நேர்மையான ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க திமுக முயற்சிக்கிறது.அதிமுக மீது குறை சொல்ல முடியாததால் தற்போது மதுக் கடைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது நடைமுறை சாத்தியமில்லை. அருகில் உள்ள மாநிலங்களில் அமல்படுத்தினால் தமிழகத்திலும் மதுவிலக்கை கொண்டுவரலாம்.

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 ஆண்டுகளில் பட்டியலிட முடியாத அளவுக்கு சாதனைகளை செய்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சி, நலத்திட்டங்களின் பொற்கால ஆட்சியாகும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி, வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம். இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x