Published : 01 Nov 2014 08:37 AM
Last Updated : 01 Nov 2014 08:37 AM

நேர்மையாக பாரபட்சமின்றி செயல்படுவேன்: தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பேட்டி

தேர்தல் ஆணைய விதிகளின் படி வெளிப்படையாக, நேர்மையாக, பாரபட்சமின்றி செயல்படு வேன் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்த பிரவீண் குமார், தேர்தல் துறையில் இருந்து வேறு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் அவரை விடுவித்து, தமிழக வேளாண் துறை முதன்மைச் செயலராக இருந்த சந்தீப் சக்சேனாவை புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்தது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா 2 நாட்களுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2 நாட்களாக தேர்தல் பணி, வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து தேர்தல் துறை அதிகாரிகள், அலுவலர் களுடன் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வாக்காளர் சுருக்க முறைத் திருத்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இதுவரை பணிபுரிந்த அனைத்து துறைகளிலும் வளர்ச்சி, முன்னேற்றப் பணிகளை சிறப்பாக செய்தேன். அதேபோல தேர்தல் துறையிலும் சிறப்பாக செயல்படுவேன். தேர்தல்கள் நடத்துவது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள் வது போன்றவற்றில் எந்தவித குழப்பங்கள், புகார்களும் இல்லாதவாறு, பாரபட்சமின்றி, நேர்மையாக, தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு செயல் படுவேன்.

வாக்காளர் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் முகாம் கள் நடக்கும்போது, அரை மணி நேரம் ஒதுக்கி, தங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா அல்லது வேறு நபர்களின் பெயர் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். முகவரி மாறினால், உரிய திருத்தங்களை தேர்தல் துறைக்கு அளித்து, பட்டியலிலும் அந்த மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவம்பர் 2-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த முகாமுக்குச் சென்று, உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

இணையதளம் வாயிலாகவும் பலர் விண்ணப் பித்துள்ளனர். இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் பெருமளவு எழுத்துப் பிழைகளை தவிர்க்க முடியும். வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் அனைத்து குடிமக்களும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். வாக்காளர்கள் எளிதில் அணுகக்கூடிய, நட்பு ரீதியான துறையாக தேர்தல் துறை செயல்படும். வாக்காளர் அட்டை, பட்டியலில் பிழைகளைத் திருத்த புதிய திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x