Published : 01 Oct 2014 12:25 PM
Last Updated : 01 Oct 2014 12:25 PM

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேரையும், அவர்களது 75 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால், இலங்கைச் சிறைகளில் உள்ள 76 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 72 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் அவர்களது படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

71 படகுகள் இலங்கைக் கடற்படை வசம் உள்ளன. மீனவர்களை விடுவிப்பதில் மத்திய அரசு காட்டிய முனைப்பைப் பாராட்டும் இத்தருணத்தில், படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்.

வடகிழக்குப் பருவமழை நெருங்கி வரும் நிலையில், படகுகளை உடனடியாக மீட்காவிட்டால் அவை மேலும் சேதத்திற்கு உள்ளாகும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதேபோல். கடந்த 27-ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் அக்.10 வரை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 29-ம் தேது கோட்டைப்பட்டினம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். பாக்ஜல சந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் மறுக்கப்பட்டு வருகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அண்மையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேரையும், அவர்களது 75 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்" இவ்வாறு முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x