Published : 28 Sep 2013 08:19 PM
Last Updated : 28 Sep 2013 08:19 PM

திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி, 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் உள்ளது புலவன்பாடி கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த பழனி - மலர் தம்பதியின் 4 வயது குழந்தை தேவி. பெரியவர்கள் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சிறுமி தேவி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சங்கர் என்பவரது நிலத்தில் மூடப்படாமல் இருந்த 400 அடி ஆழ்துளை கிணற்றில் மீது போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு மீது கால்வைத்த தேவி உள்ளே விழுந்தார்.

அதிகாலை 7 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்ட உறவினர்கள் கூச்சலிட்டு, கிணற்றில் கயிறு போட்டு மீட்க முயற்சி செய்தனர். அவர்களால் எதுவும் முடியாத நிலையில், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவுடன் மருத்துவ குழுவும் வந்தது. 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கின. சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 3 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 1 ஹிட்டாச்சி இயந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்த்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணறு இருக்கும் பகுதிக்கு அடியில் பாறைகள் உள்ளதால், பள்ளம் தோண்டும் பணி மெதுவாக நடந்தது. மாலை 4 மணி வரை சிறுமியின் குரல் கேட்டது.

இதற்கிடையே, கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் கற்பகம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் கே.பி.ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் மாலை 5.30 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்தனர். மாலை 6 மணிக்கு, மீட்புப் பணியைத் தொடங்கிய அக்குழுவினர், போர்வெல் மீட்புக்கருவி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 15 நிமிடங்களில் சிறுமியை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டனர்.

சுமார் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின், ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுமி தேவி மீட்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஆழ்துளையில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தேவிக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிழந்தார். இதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சிறுமி தேவியின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால், சிகிச்சைப் பலனளிக்கவில்லை என்றும், நீண்ட நேரம் குழியில் இருந்ததால், தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றும் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

சிறுமி தேவியின் இழப்பு, அவரது பெற்றோர், உறவினர் மட்டுமின்றி திருவண்ணாமலையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தலைமறைவான ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சங்கரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x